Saturday, October 18, 2008

வந்தாய் வென்றாய் சென்றாய் ----வீழ்ந்து விட்டேன்.

நாளைக்கு அவளை என் வீட்டுக்கு அழைக்கலாம் என்று ஆவலோடு என் மனதை சாந்தபடுத்தி இன்றைய வகுப்புக்கு சென்றேன். எங்கள் முந்தைய உரையாடல் மூலம் அவளை பற்றி நல்ல ஒரு எண்ணம் ஏற்பட்டதன் விளைவாக மனம் அவளையே சுற்றி சுற்றி வருகிறது. அவள் என்னுடன் எந்த விதமான நட்பினை பாராட்டுகிறாள் ? வெறும் தமிழ் நண்பர் என்பது மட்டுமா? நான் எப்படி அவளுடன் பழகுவது ? வகுப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அவளுடன் பேச என்ன செய்வது? அவளோடு பேசும் போது என் மனம் என்னை விட்டு நீங்கி விடுகிறது. என்னால் என் மன ஓட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கடனே வந்து விழுகின்றது.


அவளை பற்றி மேலும் நான் அறிய விழைகிறேன். ஞாயிறு அன்று அவளை என் வீட்டுக்கு அழைக்கலாம் என்று எண்ணி என் அன்றைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். ஆனால் அதைப் பற்றி சிறிதேனும் சிந்தை செய்யாமல் அவள் அகன்றாள்.

அவளின் இயல்பான மொழிப் பயன்பாட்டில் எனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. நற்குணப் பெண் அவளின் மனதுள் எப்படி என்னை சிறை செய்வேன்?

மேகத்தின் உள் மறைந்த நிலவைப் போல அவள் மனம் உள்ளது. எப்போதோ தெரியும் சிறு ஒளிக் கீற்றில் அவள் உள்ளக் கருத்தை எப்படி அறிவது?
காற்றில் களைந்து ஓடும் மேகத்திரள் போல் அவள் மனத்திரை என்னைக் கண்டதும் எனக்காக ஓடி ஒதுங்காதா? நான் அவள் மனதோடு இனிய பொழுது கழிக்க இடம் அளிக்காதா?

அவள் முகமலர் என் மனத்தின் உள் பதிந்தது போல் என் மனம் அவள் உள் கலந்து உறையாதா? அழகு மிக்க மலர் மலர் முகச் சிரிப்பை எனக்காக சிந்த மாட்டாளா?

தமிழ்த் தேனே நாங்கள் இருவரும் மனம் உவந்து பருகுவது உனையே. என் மனத்து என்ன அலைகளை அவளிடம் சென்று சேர்ப்பாயா? உன் இனிய சுவை சேர்த்து என் மனக்காதலை அவளிடம் தெரிவிப்பாயா?

மலைப் பாதையில் இன்று நான் நடந்து சென்றபோது கண்ட காட்சிகளை நான் எப்படி உரைப்பேன்? மழலை பேசும் குழந்தைகள், ஓடி ஆடும் சிறார்கள், அழகு பெண்கள் எல்லோரும் எத்துனை சிறப்பாக தங்கள் பொழுதினை கழித்து மகிழ்ந்தனர்?

விரிகடலின் கரையில் அமைந்த இம்மலையின் மேல் செப்பனிடப் பட்ட இந்த சாலையின் இரு மருங்கிலும் மலை முழுதும் பரவிக் கிடந்த மரங்களும், செடிகளும், கொடிகளும், புல்வெளிகளும் இயற்கை அன்னையின் கைவண்ணத்தை எவ்வளவு அழகாக வெளிபடுத்தின?

இந்த அழகிய உலப்பாதையில் மங்கையர் அனைவரும் தங்கள் காதலருடன் சேர்ந்து நடந்த காட்சியும் மக்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்திய பாங்கும் பேரழகோடு இருந்த நிலையை நான் உரைக்க வல்லேன்?

என் மனத்தேரில் அமர்துள்ள கண்மணி நீ மட்டும் இருந்திருந்தால் ஆஹா! எத்தனை சிறப்பு பெற்று இருக்கும் இந்த மலைப்பாதை உன் பாதம் பட.

மலர் போன்ற அவள் இணைக்கைகளை அல்லை எடுத்தபடி சேர்ந்து நான் நடந்திந்தேனானால் அதற்கு ஈடு உண்டோ? என் மனகிடக்கையை ஒன்றும் அறியாமல் நான் அழைத்தும் ஏதும் சொல்லாமல் சென்றாயே?

உன்னை நான் என்று அடைவேன்?

நீலக்கடல் எங்கும் நாவாய்கள் அழகாக அணி வகுத்து பவனி வரும் அழகினையும் காற்றின் அணைப்பில் அவை முன்னேறும் வேகத்தையும் கண்ணே நீ அருகிருந்திதால் அழகுடன் இனித்திருக்கும் ஆனால் நீ இல்லாமல் உன்னை நினைத்து துயருறும் நிலை வெளிப்படுத்துவதாக அல்லவா இந்தப்படகுகள் அங்கும் இங்கும் அலைந்து என் மனத்தை பிரதி பலிக்கின்றன.

கண்ணே உனக்கு மின்மடல் அனுப்பிவிட்டு உனது பதிலுக்காக நிமிடம் ஒருமுறை மின்னஞ்சல் பெட்டியை பார்த்திருந்தேன். ஏனோ ஒரு பதிலும் இல்லை,. நான் என்ன என் காதலிய அதில் எழுதி இருந்தேன்?

நான் உன்னை எந்த நிலையில் வைத்து அறிவது? நீ அன்பு செய்வாயா மாட்டாயா என்று தெரியாமல் என் மனது அலையுனுள் பட்ட சிறு துரும்பு போல முன்னும் பின்னும் மேலும் கீழும் அலைகிறதே?

ஒளி முகம் படைத்த நீ உன் சிறுவாயால் அழகாக என்னை பார்த்து ஒரு குறு நகை புரியாயோ? அந்த குறிப்பில் என் மீதுள்ள காதலை உணர்த்தாயோ? நான் உன்னை நினைந்து நினைந்து உனுக்குலைந்த நிலையை எப்படி உரைப்பேன்?

கண்களின் சிருஅசைவால் நீ உன்னை எனக்கு தர மாட்டாயா? நாளும் நீ எத்தனையோ என்னிடம் பேசுவாய் என்று மயங்கி அவளிவுற்றேனே?
என் மனக் காதலை நான் காட்டும் அன்பின் மூலம் அறிந்து உன் மனத்துள் என்னை சேர்க்க மாட்டாயா?

மலர்கள் எல்லாம் வண்டுகளை நோக்கி தங்கள் புன்னகை வீசுகின்றன. மெல்லிதழ் படைத்த நீ என்னிடம் ஒரு சிறு அசைவையும் காட்ட மறுப்பதேன். உன் மனத்தில் எனக்கொரு இடம் அமைப்பாய் என்று காத்திருக்கின்றேனே?


ஞாயிற்றின் பொன்னொளியில் பூத்த ஒரு செந்தாமரை மலரைப்போல் உன் இரு கண்ணோளியில் என் மனத்தாமரை மலர்ந்து உன் மனதை நோக்கி ஒளியோடு மணம் வீசுவதை நீ அறியாயோ?

அருள் பெற்ற மனம் போல் உன் உள் அன்பினைப்ப் பெற்று நான் உய்யலாம் என்று எண்ணி தவம் கிடக்கும் கோலத்தைகண்டு நீ உன் முழுமனதோடு என்னை ஆரத்தழுவிக்கொள்வாயோ?

தேன் நிறைந்த பலச் சுளைபோல் அமைந்த உன் இதழ்களால் என்னை நோக்கி உள்ளப்பூ விரிய ஒரு மென்னகை புரிந்தால் என் மனம் அடையும் ஆனந்தம் எப்படி விவரிப்பேன்?

காற்றில் அலையும் பட்டற்ற கொடி போலே என் கட்டற்று உன்ன்னையே எண்ணி எண்ணி அலையும் என் மனதை அறியாயோ?

மனம் எல்லாம் நீயே முளுதமர்ந்து என்னை வேறு சிந்தனை இல்லாமல் கட்டியமைத்திட்டாய். எப்படி நான் உன் அருகாமை இல்லாமல் இனி வாழ்ந்திட முடியும்?

இத்தனை துயருடன் அலைகடலின் சிறு தெப்பமென இலக்கின்றி பயணம் செய்யும் என்னை உன் மனம் எனும் விளக்கைக் காட்டி உன்னுள் என்னை சேர்ப்பாயா?

என் இந்த துன்பம் எதுவும் அறியாமல் உன் பணியிலேயே உன் உள்ளம் திருப்பி உள்ளாய். ஒன்றை அறிந்துகொள்! என் மனக்காதளினால் என் உயிர் கரைந்தளிவது உன்னால் தான். ஆனால் இதையும் நீ எப்படி அறிவாய்?



பார்ட் ௨:



ஆற்றை கடக்க படகில் ஏறி துடுப்பு பிடித்து நகரும்போதே கையிலிருந்து விடுபட்ட துடிப்பினைப் போல கண்ணே நீ என்னை "விட்டு விட்டாயே" . ஆவலுடன் என் மனக் காதலை உன்னிடம் சொல்லி என் மனத்திருக்கும் தேவி நீதான் என்று வெளிப் படுத்த எண்ணிய வேளையில் என் நெஞ்சில் கூரிய வேலைப் பாய்ச்சி விட்டாயே!.

நாம் ஒருவரை ஒருவர் அறிந்து "இயல்பிலேயே காதல் மலர் பூக்கும்" , அம்மலரை உன் அழகு கைகளில் காணிக்கை ஆக்கலாம் என்று நினைத்திருந்தேனே! நீயோ முன்பே வேறொருவன் உள்ளத்தை களவாடி விட்டாய் என்று இயல்பாக சொல்லிச் சென்றாயே!

மண்ணில் ஊன்றி வைத்த காதல் விதை மெதுவாக தக்க நேரத்தில் மண்ணைப் பிளந்து வந்து உன் அன்பு நீரில் வளர்ந்து கனி கொடுக்கும் அன்று நான் காத்திருந்த வேளையில் உன் அழகிய பிஞ்சு கால்களால் அதனை மிதித்து நசுக்கி விட்டாயே!


இந்த சில நாட்களில் உன்னிடம் நான் பேசிய ஒரு சில வார்த்தைகளைக் கொண்டே உன் மனதில் என்னை நிறைத்து விடலாம் என்று முழு மனதோடு
இருந்த வேளையில் உன் உள்ளத் தாமரையை வேறொரு வண்டு கவர்ந்து விட்டதாக சொல்லிச் சென்றாயே!


நீ என்னிடம் சொன்ன இந்த செய்தியையும் எந்த இயல்பும் மாறாமல் என் மனதில் வாங்கி மனம் கலங்கி தவித்து நின்றதை நிச்சயம் நீ அறிய மாட்டாய்!

சீ! சீ! இந்த பழம் புளிக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லையே!

உன் மேல் இந்த சில காலத்துள் எத்துணை அன்பை வைத்து விட்டேன்!. உன்னை விட்டு என்னால் எப்படி எளிதில் விட்டு நீங்க முடியும்?

காற்றின் வேகத்தை தாளாமல் ஆடிடும் கலம் போல என் மனம் இந்த துன்பக் கடலில் அலைகிறதே!

ஒன்று நிச்சயம். என் மனதில் ஒரு ஆறாத வடுவை நீ உன்னை அறியாமலேயே மிக ஆழமாக ஏற்படுத்தி விட்டாய்!

ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இவள் தான் என்று மனம் முடிவு செய்த பின்னே இல்லை! இல்லை! இது மாற்றான் உடமை என்று அறிவு சொன்னால் எப்படி என் மனம் ஏற்று கொள்ளும்?

மேகத்துள் அகப்பட்ட நிலவியப் போல என் மனம் நின் மேல் கொண்ட காதலால்
ஒரு சுவடும் இல்லாமல் " இல்லாது போயிற்றே!" எப்போது இந்த மேகங்கள் விலகும்? எப்போது என் மனதை திரும்ப பெறுவேன்?

என் உள்ளத்தில் காதலை மிக நேர்த்தியாக பயிர் செய்து விட்டு அதனை நீயே பிடுங்கி எரிந்து விட்டாய்!. என்னே உன் சீர்மை!

பாகம் ௩

நீ நேற்று எங்கோ உன் நண்பர்களைக் காண செல்கிறேன் என்று சொல்லி நம் வழக்கமான பாதையை விட்டு விலகிச் சென்றாய்! ஏனோ! கண்ணே அது தான்
என் வழி! என்று சொல்ல இயலாமல் உன் மனத்தையே பின் தொடர்ந்து வந்ததை நீ அறிவாயோ!

ஒன்று நிதர்சனம் ! உன் நிலையை என் அறிவு ஏற்றுக் கொண்டது. ஆனால் என் மனம்? அது என் சொல் கேளுமோ?

ஐயோ! உன்னை நினைத்திருந்த இக்காலத்தில் இறையை நினைத்திருந்தால் முக்தியேனும் வாய்த்திருக்கும்!

பெண்களெய் திருமணம் ஆகிவிட்டால் தாலி கட்டிக்கொள்வது போல் தயவு செய்து ஒருவனை உங்கள் மனம் ஏற்று கொண்டவுடன் ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்து கொள்ளுங்கள் !

இல்லையேல் என்னைப் போன்று எத்தனையோ பேர் மனம் கலங்கி நிற்க வேண்டிய நிலையை உண்டாக்கிய பாவம் உங்களை சேரும்.

கண்ணே ! நீ இப்போதே சொல்லி விட்டாய் உன் நிலையை! ஒரு வேளை இன்னும் சில காலம் கழித்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்பதை என்னால் நிச்சயம் சிந்தித்து பார்க்க முடியவில்லை.

வந்தாய்! வென்றாய்! சென்றாய்!----------வீழ்ந்து விட்டேன்!

No comments: